குப்பையை கொட்டி திருப்பூர் மாநகராட்சி பார்த்த வேலை... விமானப்படை அதிகாரிகள் அதிர்ச்சி
மாநகராட்சி குப்பைகளை சாமலாபுரம் அடுத்த இச்சிப்பட்டியில் உள்ள பாறைக் குழியில் கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் குண்டு கட்டாக கைது செய்த போலீசார். பெண் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு மற்றொரு பெண் மயக்கமடைந்தார்.
சூலூர் விமான படை தளத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என ராணுவ அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை பாறை குழியில் மாநகராட்சி கொட்டி வருகிறது. திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறை குழியில் கொட்டுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள இச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பாறைக் குழியில் குப்பைகளை கொட்ட மாநகராட்சி திட்டமிட்டு இரண்டு நாட்களாக குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் தங்கள் பகுதியில் குப்பைகளை கொட்ட கூடாது என அப்பகுதி பொதுமக்கள் திருப்பூரில் இருந்து சாமளாபுரம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் பெண் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது மற்றொரு பெண் மயக்கமடைந்து கீழே சரிந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே குப்பை கொட்டும் பகுதியின் அருகில் சூலூர் விமான படைத்தளம் உள்ளதால் கழுகு போன்ற பறவைகள் குப்பைகளை தேடி வருமா அதனால் விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என சூலூர் விமான படை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.