13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 22 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 22 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மாடசாமி (எ) மகேஷ் (29/25) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா இன்று (16.09.2025) குற்றவாளி மாடசாமி (எ) மகேஷ்க்கு 22 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.12,000 அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அமிர்தஜோதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.