நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் கொலை வெறி தாக்குதல்: ஒருவர் பலி - 2 பயணிகள் படுகாயம்!
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சிமணியாச்சியை சேர்ந்த கந்தசாமி மகன் பாண்டிதுரை (29) என்பவர் 4வது நடைமேடையில் உணவு உண்டுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர் ஒருவர் இரும்புக்கம்பியால் பாண்டிதுரையை தாக்கினார். தொடர்ந்து, அதே நடைமேடையில் நின்றிருந்த மேலும் 2 பேரையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.காயமடைந்த மூவரையும் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீசார் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தாக்குதலில் காயமடைந்த கோவையைச் சேர்ந்த தங்கப்பன், தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டிதுரை, கேரளாவைச் சேர்ந்த பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தங்கப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் தச்சநல்லூா் ரயில்வே பாலம் அருகே நின்ற உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.