ஓடும் ரயிலில் பிளாட்பாரம் இடுக்கில் விழுந்த பெண்... கத்தியே காப்பாற்றிய பெண் போலீஸ்
திருப்பூரில் ரயிலில் இருந்து இறங்கும்போது ரயிலுக்கு, பிளாட்ஃபாரத்துக்குமான இடைவெளியில் பெண் ஒருவர் விழுந்த நிலையில், அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் சாதுர்யமாக செயல்பட்டு அறிவுரை வழங்கி காப்பாற்றினார்.
திருப்பூர் ரயில் நிலையத்துக்கு இன்று அதிகாலை மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில் வந்தது. அந்த ரயில் திருப்பூர் நிலையத்தின் முதலாவது பிளாட்ஃபாரத்தில் நின்றது. பின்னர் புறப்படும்போது, அதிகாலை நேரமானதால், ரயிலில் இருந்து இறங்க வேண்டிய 58 வயதுடைய திருப்பூரை சேர்ந்த சுசிலா என்ற ஒரு பெண் பயணி இறங்காமல் விட்டு விட்டார்.
திடீரென திருப்பூர் வந்ததை பார்த்த சுசீலா, தனது பேத்தியுடன் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றார். முதலில் பேத்தியை இறங்கச் செய்தார். 10 வயதான சுசீலாவின் பேத்தி பாதுகாப்பாக இறங்கிய நிலையில், ரயில் வேகமெடுத்த காரணத்தால் சுசீலா இறங்கும்போதே பிளாட்ஃபார்த்துக்கும், ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் விழுந்தார்.
இதை பார்த்து அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர் திவ்யா, அந்த பெண் பயணி சுசீலா விழுந்த இடத்துக்கு ஓடி வந்து, பிளாட்பாரத்தில் ரயில் சக்கரத்துக்கு அருகில் கிடந்த சுசிலாவை எந்த அசைவும் இல்லாமல் படுக்குமாறு கூறினார்.
ஆனால் அந்த சுசீலா எழ முயன்ற நிலையில் காவலர் திவ்யா மோகன் அந்த பெண்ணை எழுந்திருக்காமல் படுத்திருக்குமாறு திரும்பத் திரும்ப சத்தம்போட்டு கூறினார்
தொடர்ந்து சுசீலாவிடம் பேசிக் கொண்டே இருந்ததுடன் அசையாமல் இருக்க வழிகாட்டினார்.
இதற்குள்ளாக ரயிலுக்குள் இருந்த பயணி ஒருவர் நிலைமையை உணர்ந்து அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். இதையடுத்து உடனடியாக அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஷைன், ஸ்ரீஜித் ஆகியோர் பெண் பயணி சுசீலாவை வெளியே தூக்கினார்.
இதனால் ரயில் சக்கரத்துக்கு அருகில் விழுந்த நிலையில் லேசான சிராய்ப்பு காயங்களுடன் காப்பாற்றப்பட்டார்.
சாதுர்யமாக செயல்பட்டு அந்த பெண்ணுக்கு தொடர் அறிவுரை வழங்கி காப்பாற்றிய பெண் காவலர் திவ்யா மோகனின் செயலை சக காவலர்களும் ரயில் பயணிகளும் பாராட்டினார்கள்