வெள்ளிங்கிரி மலை ஏற்றத்தில் மாணவர் உயிரிழப்பு
பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏற்றத்தில் மாணவர் உயிரிழப்பு
கோவை அருகே உள்ள பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் ஐந்தாவது மலையில் ஏறிக்கொண்டிருந்த போது இளம் மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் (23) என்பவர், பேரூர் தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள சேரன் கல்லூரியில் Pharm-D ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகே வாடகை வீட்டில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார்.
நேற்று இரவு சுமார் 10 மணியளவில், நண்பர்கள் அபி, மகேந்திரன் உள்ளிட்ட 8 பேருடன் வெள்ளிங்கிரி மலையை ஏறத் தொடங்கியுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் ஐந்தாவது மலையை அடைந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மயங்கி விழுந்துள்ளார். அங்கு இருந்தவர்களின் உதவியுடன் மீட்க முயன்றும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, டோலி தூக்கும் நபர்களின் உதவியுடன் அவரது உடல் மலையிலிருந்து கீழே இறக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.