தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது - தூத்துக்குடியில் மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: ஆட்சியர் தகவல்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டு, அரசுப் பணிகள் மீண்டும் வழக்கம்போல் தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 15-ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. கடந்த மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளைத் திரும்பப் பெற்றுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து அரசுத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் இன்று (மே 7) காலை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்றன. மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் மற்றும் இதர மக்கள் நலத் திட்ட முகாம்கள் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் 'மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்', வரும் திங்கள் (மே 11) முதல் வழக்கம்போல் நடைபெறும். தேர்தல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வரும் திங்கட்கிழமை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
