பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய கால் நாட்டு விழா!
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலய 70 வது ஆண்டு விழா கால் நாட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில், இந்திய விடுதலைப்போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலய விழா சித்திரை மாதம் கடைசி வெள்ளி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற மே 8,9,10 ஆம் தேதிகளில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு வீரசக்கதேவி ஆலயத்தில் கால் நாட்டு விழா நடந்தது.
அதனைமுன்னிட்டு, வீரசக்கதேவிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கால் நாட்டு விழாவில் வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் குளத்தூர் மாஜி ஜமீன்தாரர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜப்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வீரசக்கதேவி ஆலய 70 வது ஆண்டு விழா, வருகிற 08.05.2026, 09.05.2026, 10.05.2026 (சித்திரை 25, 26, 27) வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும், பாஞ்சாலங்குறிச்சியில் வெகு விமர்சையாக நடைபெறும். விழாவில் கிராமிய கலை நிகழ்ச்சிகளான தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், நையாண்டி மேளம் மற்றும் பட்டிமன்றம், கருத்தரங்கம்,
இன்னிசை கச்சேரி, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள், முளைப்பாரி எடுத்தல், பழப்பெட்டி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
மாவீரன் ஊமைத்துரை தொண்டர்படையினர் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞரணியினரால் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்திற்கு நினைவு ஜோதி தொடர் ஓட்டமாக எடுத்து வரப்படும்.
திருவிழாவில் லட்சக்கணக்காக பொதுமக்களும், முக்கிய பிரமுகர்களும் வருவதால், விழாவையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
