தூத்துக்குடி கோர்ட்டில் செய்தியாளருக்கு கொலை மிரட்டல் : வேடநத்தம் மாணவி கொலை குற்றவாளி மீது வழக்குபதிவு..!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகிலுள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி காணாமல் போன +2 படிக்கும் மாணவி, மறுநாள் காட்டுப் பகுதியில் உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், மாணவியை வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்தது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த 30 வயதான தர்ம முனீஸ்வரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவன் மீது ஏற்கனவே 33 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும், ஒரு மூதாட்டியை கொலை செய்து நகையை திருடிய குற்றத்துக்காக நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, வெளியில் வந்திருப்பதும் தெரிய வந்தது. பின்னர் தர்ம முனீஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக, தரும முனீஸ்வரனை போலீசார் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் அவனை படம் பிடிக்க முயன்ற செய்தியாளரை, "ஏய்... செத்து போய்ருவா. பார்த்துக்கோ..." என்று போலீசார் கண்முன்னே பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளான். உடனே, போலீசார் "என்ன பேச்சு பேசுகிறாய்?" என்று அவனை கண்டித்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து, நாட்டையே உலுக்கிய பாலியல் மற்றும் கொலை குற்றங்களில். சம்பந்தப்பட்ட குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மீது, புதியதாக அமையவிருக்கும் அரசும், மாவட்ட காவல் துறையும் கடுமையான தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் தரப்பில் எழுப்பப்பட்ட கோரிக்கை வலுவடைந்த நிலையில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
