தூத்துக்குடியில் ஆளுங்கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் தனியார் தூய்மை பணி நிறுவனம் - திமுகவுக்கு இழப்பா?
தமிழகம் முழுவதும் பல்வேறு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் தூய்மை பணியை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறது அவர்லேன்ட் என்ற தனியார் நிறுவனம். இந்த நிறுவனம் ஒப்பந்த பணியை எடுத்த நாள் முதல் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறதாம். குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சியில் தொடர்ந்து மூன்று வருடங்களாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கும் அவர்லேண்ட் நிறுவனத்துக்கும் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறதாம். குறிப்பாக அரசு நிர்ணயித்த சம்பளத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவது கிடையாது. அதுபோல பி.எப் பணத்திலும் பல்வேறு மோசடி நடக்கிறதாம்.
இது போல பல்வேறு வகையில் தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் 1000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை அவர்லேண்ட் நிறுவனம் தொடர்ந்து வஞ்சித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்லேண்ட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் ராகேஷ், முருகேசன் இருவரும் மாநகராட்சிக்கும் கட்டுப்படுவது கிடையாதாம். தூய்மை பணியாளர்களிடமும் கனிவு காட்டுவது கிடையாது. சில தினங்களுக்கு முன்பு தூய்மை பணியாளர் சங்கத் தலைவர் பொன்ராஜ் இடைக்கால பணிநீக்கம் செய்தது அவர்லேண்ட் நிறுவனம். இது தொடர்பாக போராட்டம் நடைபெற்றது. இருந்த போதிலும் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று அவர் லேன்ட் நிறுவனம் பிடிவாதம் காட்டி வருகிறது.
இதனையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சஸ்பெண்ட் உத்தரவை நான் பார்த்துக் கொள்கிறேன் ரத்து செய்யப்படும் என்று உறுதி அளித்தார். மூன்று நாட்கள் ஆகியும் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படவில்லை. பொன்ராஜ் பணி செய்ய அனுமதிக்கவில்லையாம். மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவின் பெயரில் அவர்லேன்ட் நிறுவன அலுவலகத்திற்கு சென்று தூய்மை பணியாளர்கள் மேயர் கூறியபடி பணியில் பொன்ராஜை நியமிக்க வேண்டும் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய போது, அவர்லேண்ட் நிறுவனத்தை சார்ந்த முருகேசன் நாங்கள் பத்து மாநகராட்சியில் ஒப்பந்தப் பணி எடுத்து செய்கிறோம். யாருக்கும் நாங்கள் கட்டுப்பட போவதில்லை. யாருடைய உத்தரவு எங்களை கட்டுப்படுத்த போவதில்லை என்று பேசியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் சில மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணி செய்து வரும் தூய்மை பணியாளர்களை லேண்ட் நிறுவனம் தொடர்ந்து வஞ்சித்து வருவதை மாநகராட்சியும் கண்டிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மாநகராட்சி நிர்வாகமும் எந்த உத்தரவு போட்டாலும் அவர்லேண்ட் நிறுவனம் கண்டு கொள்வது கிடையாதாம். இதனால் ஆளுங்கட்சி எந்த உத்தரவு போட்டாலும் மாநகராட்சி நிர்வாகம் ஆணை வழங்கினாலும் அவர்லேன்ட் நிறுவனம் அதனை அமுல்படுத்துவது கிடையாது. ஆகையால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தூய்மை பணியாளர்கள் பிரச்சனையில் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிய வருகிறது.
உடனடியாக இதற்கு ஒரு நிரந்தரவு தீர்வு காண வேண்டும். ஒரே தீர்வு என்னவென்றால் அவர்லேன்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு என்பது உறுதியாகவே தெரிய வருகிறது. மூன்று வருடமாக மாநகராட்சி மேயரும் மாநகராட்சி ஆணையரும் மாநகராட்சி பணியில் ஒப்பந்தம் செய்துவரும் லேன்ட் நிறுவனத்திற்கு பல உத்தரவுகள் போட்டாலும் அதனை கண்டு கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
