கோவில் விழாவில் போலீசை கத்தியால் குத்த பாய்ந்த வாலிபர்.. பரபரப்பு வீடியோ
திருப்பூர்: வைகுண்ட ஏகாதசி விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலரை வாலிபர் கத்தியால் குத்த பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து காலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சொர்க்க வாசல் வழியாக சென்று வருகின்றனர். இதனால் அங்கு திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வந்த நபர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். மேலும் அவர் தகாத வார்த்தைகளால் அனைவரையும் திட்ட ஆரம்பித்து பிரச்சினை செய்து கொண்டு வந்தார். இதனால் அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் ராமகிருஷ்ணன் அந்த வாலிபரிடம் விசாரித்ததில் கோபமடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலரை தாக்க முயன்றார். தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு காவலரை குத்தூவதற்காக பாய்ந்து செல்லும் அந்த வாலிபரைக் கண்டு சாமிதரிசனம் செய்ய நின்ற பக்தர்கள், குழந்தைகள் அதிர்ச்சியில் ஓடினர்.
மேலும் அதிர்ச்சியடைந்த காவலர் ராமகிருஷ்ணன் தனது பெல்ட்டை கழட்டி அதில் தன்னை தற்காத்துக் கொள்கிறார். இதனை தொடர்ந்து அங்கு வந்த மற்ற காவலர்கள் இணைந்து கத்தியுடன் இருந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் மதுரையை சேர்ந்த இளங்கோ என்பதும் போதையில் இருந்ததும் தெரிய வந்தது. அந்த வாலிபர் கத்தி, மிளகாய்ப்பொடி போன்றவற்றை உடன் எடுத்து வந்ததால் போலீசார் அவரை மேலும் விசாரித்து வருகின்றனர்.
