தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு - அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆரம்பகட்ட விசாரணையில் அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று (மார்ச் 16) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த மார்ச் 10-ஆம் தேதி மாயமான நிலையில், மறுநாள் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிபிஐ விசாரணை கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி மாயமான அன்றே பெற்றோர் புகார் அளித்தும், போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கை இனி விளாத்திகுளம் டிஎஸ்பி (DSP) நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடம் பெறப்படும் வாக்குமூலங்களை வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளாகச் சேமிக்க வேண்டும் என்றும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் முன்னேற்றம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பெற்றோர் முதலில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதியத் தவறிய சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி ஆய்வாளர் (SI) மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவல்துறை தரப்பில், சந்தேகத்திற்குரிய 5 பேரின் டிஎன்ஏ (DNA) மாதிரிகள் சேகரிக்கப்பட்டுத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், எஸ்பி தலைமையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி உறவினர்களும் கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வழக்கில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. காவல்துறையின் அலட்சியமே இத்தகைய அசம்பாவிதங்களுக்குக் காரணமாக அமைவதாக நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி