தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை: அரசு நிர்ணயித்துள்ள கால அவகாசத்துக்குள் முடிக்கப்படும் - ஒரு நபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர்.!


தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணைய அதிகாரி மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஏற்கனவே 30 கட்ட விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அதில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், 

வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்களிரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து 31வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த முகாமில், துப்பாக்கி சூடு நடந்த அன்றைய தினம் பணியில் இருந்த மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், 

மற்றும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், தடயவியல் நிபுணர்கள், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்த வட்டாச்சியர்கள் உள்பட மொத்தம் 31 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணக்கு நேரில் ஆஜரானார்கள்.

இந்த நிலையில் விசாரணை கடைசி நாளான இன்று ஒரு நபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

31 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 17 பேர் விசாரணைக்காக ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இதுவரை மொத்தம் 1360 பேருக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்டு 979 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 1223 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. ஒருநபர்‌ ஆணையத்தின் 32-வது கட்ட அமர்வு நவம்பர் 16 முதல் தொடங்கி 10 நாள் நடக்கும். இதில் துப்பாக்கிசூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை பரிசோதனை செய்த தடயவியல் அதிகாரிகள், துப்பாக்கியால் சுட்ட காவலர்கள் போன்றோரை விசாரிக்க உள்ளோம். 

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், தென் மண்டல காவல்துறை துணை தலைவர் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்படுவர். எனவே, அரசு நிர்ணயித்துள்ள கால அவகாசத்துக்குள் ஒருநபர் ஆணையத்தின் விசாரணையை முடிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!