தவெக பிரச்சார வாகனத்தை மறித்து ரகளை - அஜிதா ஆக்னல் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு.!
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரின் பிரசார வாகனத்தை மறித்து மிரட்டல் விடுத்த புகாரில், அண்மையில் திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் உட்பட 6 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர் அஜிதா ஆக்னல். அண்மையில் அக்கட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் கூறி அதிலிருந்து விலகிய அவர், கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தற்போது தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்ற நிலையில், தூத்துக்குடி தவெக வேட்பாளர் ஸ்ரீநாத்திற்கு ஆதரவாக அக்கட்சியினர் ஆட்டோவில் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். இந்த பிரசார வாகனம் லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள அஜிதா ஆக்னலின் வீட்டின் அருகே வந்தபோது, அங்கிருந்த அஜிதா ஆக்னலின் ஆதரவாளர்களுக்கும் தவெகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த அஜிதா ஆக்னல் தரப்பினர், பிரசார ஆட்டோவைத் தடுத்து நிறுத்தி, அதில் இருந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வக்கீல் ஜேசுதாஸ் அளித்த புகாரின் அடிப்படையில், அஜிதா ஆக்னல், ஜோன்ஸ் மற்றும் அடையாளம் தெரிந்த மேலும் 4 பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
