கட்டை காலில் நின்னுட்டு விஜய் என்ன பேச்சு.. ஒவ்வொரு வார்த்தையும் மறக்க கூடாது.. கீதாஜீவன் ஆவேசம்.!
சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் திமுக தவெக இடையே கடுமையான மோதல் உருவாகி வருகிறது. கரூர் சென்ற முதலமைச்சர் விஜய் திமுக, முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். இதனால் திமுகவினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தவெக கட்டை காலில் நிற்பதாகவும், விஜய் பேசும் ஒவ்வொன்றையும் நினைவில் வைத்து பதிலடி கொடுக்க வேண்டும் என கீதாஜீவன் ஆவேசமாக பேசியுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், "சட்டமன்ற தேர்தலில் தவெக மாய பிம்பத்தில் வெற்றி பெற்றது. மாய பிம்பத்தை உருவாக்கி தவெக ஆட்சியமைத்துள்ளது. படத்தில் ஒருவன் 100 பேரை அடித்து தூக்குவான். அதையெல்லாம் நம்பிட்டு இருக்கிற மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விஜய் 100 பேரை அடிப்பார் என நம்புகிறார்கள். சின்ன பிள்ளைகளை வைத்து மாற்றத்தை தருகிறோம் என்று ஏமாற்றத்தை தந்துள்ளனர்.
அந்த மாய பிம்பத்தை நாம் உடைத்தாக வேண்டும். திமுக சிப்பாய்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக போர் புரிந்து வெற்றி பெற வைக்க வேண்டும். நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் நம் கூட்டணியில் இருந்தவர்கள். நம் தலைவரே, தொங்கு சட்டமன்ற வந்துவிட்டது. கவர்னர் ஆட்சிக்கு எல்லாம் விட வேண்டாம். ஒன்றியத்தில் இருப்போர் தமிழகத்தை கைப்பற்றிவிடக்கூடாது.
தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆதரவு தெரிவிக்க சொன்னார். அந்த கட்டை காலில் தான் தவெக நிற்கிறது. சுயமான காலில் எல்லாம் தவெக நிற்கவில்லை. அதையெல்லாம் மறந்துவிட்டு விஜய் வாய் பேசுகிறார். என்ன பேச்சு பேசறார் பார்த்தீங்களா. இதை நாம் நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அவன் நம் தலைவரை பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நியாபகம் வைத்து அந்த கட்சியை ஒழிக்கணும்.
தீயசக்தி, தீஞ்சு போன சக்தி என்று என்னென்னவோ சொல்கிறார். ஆனால் தவெகவில் சேர்ந்தால் ஊழல்வாதிகள் தூயசக்தியாக மாறிவிடுவார்களா. அது எப்படி முடியும். தமிழக மக்கள் என்ன ஏமாளிகளா. முதலமைச்சர் செய்யும் வேலைகள் அப்பட்டமாக மக்களுக்கு தெரிகிறது. விஜய் முதலமைச்சராகியுள்ளார். ஆனால் முதலமைச்சருக்கான எந்த தகுதியும் அவருக்கு இல்லை. இன்னும் நடிகராகத்தான் உள்ளார். முதலமைச்சர் விஜய் பேச்சில் மனித மாண்பே இல்லாத ஒரு நிலை நிலவுகிறது.
சினிமாவில் பேசும் அதே வசனம், அதே ஏற்ற இறக்கத்தோடு பேசி செல்கிறார். அதற்கான அர்த்தம் அவருக்கு புரியுமா என்பதே தெரியவில்லை. தெரிந்தால் நிச்சயமாக பேச மாட்டார். நிச்சயமாக அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும். என்னய்யா கூத்து நடக்கிறது தமிழகத்தில். தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி கொண்ட தமிழகம் பின்னால் சென்று கொண்டிருக்கிறது என்கிற வருத்தம் எனக்குள்ளது. அவர்களின் குற்றத்தை சுட சுட சுட்டி காட்டுவோம்" என்றார்.
