"அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எஃகு கோட்டையாக இருந்து வருகிறது" - அமைப்புச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தகவல்.!
தூத்துக்குடி தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு சென்றது. இதனால் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், ஆனந்தன், திருச்சி வளர்மதி உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து அதிமுகவில் இருந்து பலர் விலகி தவெகவில் இணைந்து வருவது குறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச்செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கூறுகையில்,
அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டு, உருவாக்கப்பட்டு, வளர்ச்சியடைந்த தலைவர்கள் இன்று அக்கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு பதவி சுகத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும், வழக்குகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தங்கள் சுயலாபத்திற்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு ஏதாவது காரணம் கூறவேண்டும் என்பதற்காக அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றது என்றும், எடப்பாடி பழனிச்சாமி கட்சியை சரியான வழிநடத்தவில்லை என்றும் கூறி செல்கின்றனர்.
அவர்களுடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டு கட்சியில் பயணித்து வரும் உண்மையான அடிமட்ட தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எஃகு கோட்டையாக இருந்து வருகிறது. இதிலிருந்து தவெக என்னும் மண் கோட்டைக்கு சிலர் சென்றுள்ளனர். அதற்காக அவர்கள் விரைவில் வருந்தும் நிலை ஏற்படும். எம்.ஜி.ஆர். 1977 முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து 1980 மற்றும் 1984 ஆகிய 3 சட்டமன்ற தேர்தல்களில் திமுக தோல்வியடைந்தது. ஆனால், 1989ல் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு ஜெயலலிதா காலத்தில் 2011, 2016 ஆகிய 2 சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்த திமுக 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அதுபோன்று அதிமுகவும் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இல்லாமல் சிலர் இதுபோன்று கட்சி மாறி செல்கிறார்கள். யார் சென்றாலும், இரட்டை இலை இருக்கிற இடத்தில் தான் உண்மையான தொண்டர்கள் இருப்பார்கள்.
கொஞ்ச நாட்கள் கூட பதவியில்லாமல் இருக்க முடியாது என்று கருதி செல்லும் இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு வருகிற தேர்தல்களில் தோற்கடிப்பார்கள். துரோகிகள் கூட்டம் முழுமையாக சென்றடைந்ததும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாநிலம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு அதிமுகவை மீண்டும் வலுவாக உருவெடுக்கச் செய்வார். தற்போதும் அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியேதான் உள்ளது. நாங்கள் ஒண்ணும் படுதோல்வி அடையவில்லை. குறைந்த வாக்கு சதவீதத்தில் வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம். அதிமுக வலுவாக மீண்டும் வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினாா்.
