மருத்துவ காப்பீடு வழங்காத தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் : ரூ6,21,904 வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.!
தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் எழிலரசி என்பவர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் இவரது கணவர் அரியநாயகம் என்பவர் தனக்கு இருதயத்தில் வலி ஏற்பட்டதால் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பின்னர் தனக்கு உடல் நிலைக் குறைவு ஏற்பட்டதால் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அதன் பின் இந்த பணத்தை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது. மேலும், அவரது காப்பீட்டையும் ரத்து செய்தது.
இதைக்கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ரத்து செய்யப்பட்ட பாலிசியை மீண்டும் புதுப்பித்து வழங்க வேண்டும், சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட மருத்துவ செலவுத் தொகை ரூபாய் 5,61,904, சேவை குறைபாடு மற்றும் LD 60T உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 50,000 வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 6,21,904 ஐ ஆறு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையெனில் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
