திருப்பூரில் வாலிபர் கொலையில் வட மாநில இளைஞர் கைது... கொலையில் சந்தேகம் தெரிவித்து உறவினர்கள் போராட்டம்.
திருப்பூரில் வாலிபர் கொலையில் வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலையில் சந்தேகம் தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள மசூதிக்கு பின்புறம் உள்ள நிட்டிங் கம்பெனியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கம்பெனி கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. அதை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைககு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அழுகிய நிலையில் கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தனியார் நிட்டிங் கம்பெனி குரு சங்கர் என்பவருக்கு சொந்தமானது என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது மேலும் குரு சங்கரின் நண்பர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் அடிக்கடி அங்கு வந்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 19ம் தேதி குரு சங்கர் ஊருக்கு சென்றிருந்த நிலையில், கம்பெனிக்கு வந்த காமராஜ் அங்கு பணிபுரிந்த வடமாநில தொழிலாளர் பப்புஸ் என்பவருடன் சேர்ந்து அன்றைய தினம் முழுவதும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மது போதையில் காமராஜ், பப்புஸ் குடும்பம் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த பப்புஸ் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து காமராஜின் தலையில் தாக்கியுள்ளதாகவும் இதில் சம்பவ இடத்திலேயே காமராஜர் உயிரிழந்துள்ளதாகவும், இதனையடுத்து பப்புஸ் தப்பி ஓடி உள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் தப்பி ஓடிய பப்புசை கும்மிடிபூண்டியில் பிடித்து திருப்பூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவமனையில் காமராஜின் உடல், உடற்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள், உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறுகையில் குரு சங்கருடைய நிறுவனத்தில் காமராஜ் பங்குதாரராக செயல்பட்டதாகவும், அவரிடம் பணம் பெற்று வருவதாக செல்போனில் தகவல் தெரிவித்தவர் அதன் பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் காமராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். தற்பொழுது குரு சங்கர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. குருசங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்கள். மேலும் இந்த புகாரை பெற்று விசாரணை மேற்கொள்ளும் வரை உடலை பெற மாட்டோம் என்று தெரிவித்ததுடன், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அவர்கள் இருக்கின்றனர்.