சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 4 பேருக்கு தலா 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை!
11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் 4 பேருக்கு தலா 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் நாசரேத் பகுதியைச் சேர்ந்தவர்களான தர்மராஜ் மகன் தினேஷ் (33), முருகன் மகன் இசக்கிமுத்து (33), சீனிராஜ் மகன் ஸ்டாலின் (38) மற்றும் முத்துராமன் மகன் ஐக்கோர்ட்துரை(33) ஆகிய 4 எதிரிகளை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று குற்றவாளிகள் 4 பேருக்கும் தலா 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூபாய் 2,500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 27 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ஷீஜா ராணி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் முருகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
