50 - க்கும் மேற்பட்ட பா.ஜ.க மகளிர் அணியினருடன் பக்திப் பெருக்குடன் விரதத்தைத் துவங்கினார் எம்.எல்.ஏ வானதி !!!
*கோவையில் "அரோகரா" முழக்கம் : 3-வது ஆண்டாகப் பழனி முருகனுக்கு மாலை அணிந்தார் எம் எல் ஏ வானதி சீனிவாசன் !!!*
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கோவையில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று காலை முருகப்பெருமானுக்கு மாலை அணிந்து தனது ஆன்மீக விரதத்தைத் துவங்கினார்.
கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் அமைந்து உள்ள பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று அதிகாலை இதற்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகப் பழனி முருகனைத் தரிசிப்பதற்காக மாலை அணிந்து உள்ள வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, இன்று காலை கோவிலுக்கு வந்து முருகப்பெருமானுக்குப் அபிஷேக ஆராதனைகளைச் செய்தார். பின்னர், கோவில் அர்ச்சகர் முன்னிலையில் "அரோகரா, அரோகரா" என்ற பக்தி முழக்கங்களுக்கு இடையே அவர் முறைப்படி மாலை அணிந்து கொண்டார்.
அவருடன் பா.ஜ.க மகளிரணியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண் தொண்டர்களும் பக்திப் பெருக்குடன் மாலை அணிந்து, பழனி விரதத்தைத் தொடங்கினர்.
இது குறித்துப் பேசிய எம் எல் ஏ வானதி சீனிவாசன், பழனி முருகனின் அருளைப் பெறவும், மக்கள் நலம் பெறவும் வேண்டித் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த விரதத்தை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். விரத நாட்களில் கடுமையான ஆன்மீகக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, பின்னர் குழுவாகப் பழனிக்குச் சென்று முருகனைத் தரிசிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
மாலை அணிந்த பெண்களின் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற முழக்கத்தால் கோவில் வளாகமே இன்று காலை ஆன்மீக மணம் கமழ்ந்து காணப்பட்டது.
