முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகை தந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த முதலமைச்சரை, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் கே. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருநெல்வேலி மேயர் ராமகிருஷ்ணன், நாகர்கோவில் மேயர் மகேஷ் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகைய்யா, உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் முதலமைச்சரை நேரில் வரவேற்றனர்.
கன்னியாகுமரி பயணம்: விமான நிலைய வரவேற்பிற்குப் பிறகு, முதலமைச்சர் தூத்துக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்குப் புறப்பட்டுச் சென்றார். கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் 'சில்வர் ஜூப்ளி' வளைவு (Silver Jubilee Arch) ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, கல்லடிவிளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை, பொன்னப்ப நாடார் சிலை மற்றும் படிப்பகத்தைத் திறந்து வைக்கிறார். இன்று இரவு கன்னியாகுமரியில் தங்கும் முதலமைச்சர், நாளை காலை அங்குள்ள பள்ளி ஒன்றில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், மீண்டும் தூத்துக்குடி விமான நிலையம் வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
