மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பேக், வாட்டர் பாட்டில் வழங்கிய காவல் ஆய்வாளர் வேல்ராஜ்.!

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சிறப்பாக படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு காவல் ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் இரட்சண்யபுரம் நவராஜ்,  மூலமாக கல்வி உபகரணங்கள் (பேக், வாட்டர் பாட்டில்) வழங்கப்பட்டது.

மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தூத்துக்குடி வடக்கு  காவல் நிலைய  ஆய்வாளர் வேல்ராஜ் முயற்சித்து வருகிறார்.  பல்வேறு பள்ளிகளில் இதுபோன்ற விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு அதன்படி செயல்படுத்தியும் வருகிறார். இந்த முயற்சியில் முதல் கட்டமாக தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபம் எதிரில் உள்ள மேலூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கல்விபயிலும் மாணவ மாணவியர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா ஆனந்தி தலைமையில்  மாணக்கர்களை அவர்களது  வகுப்பறையில் நேரடியாக சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆய்வாளரின் கேள்விக்கு பயமின்றி மாணவ மாணவியர்கள் தைரியமாக  பதில் அளித்தது சுவாரஸ்யமாக அமைந்தது. பார்ப்பவர்களை வியப்பிலும் ஆழ்த்தியது. மேலும் போக்குவரத்து விதிமுறை உள்ப்பட தலைகவசம் அணிவதன் அவசியம் வரையில் நேருக்கு நேர்  கலந்துரையாடல் சிறப்புடன்  நடந்தது. மேலும் மாணவ மாணவியர்களின்  பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சம்பந்தமாகவும் ஆய்வாளரின் சிற்றுறை மாணவர்களின் வகுப்பறையில்  சிறப்பாக அமைந்தது. 

மேலும், இரட்சண்யபுரம்  நவராஜ் இளையவேந்தன் இளைஞர் அறக்கட்டளை  மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கல்வி உபகரணங்கள் சார்ந்த (பேக், வாட்டர் பாட்டில்) உதவியை இப்பள்ளியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவ மாணவியர்கள் சுமார் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மாபெரும் உதவியை  வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் வேல்ராஜ் முதல் கட்டமாக வழங்கி சிறப்பித்தார். இதை பெற்றுக் கொண்ட மாணவ மாணவியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் காவல் ஆய்வாளருக்கும், இரட்சண்யபுரம் நவராஜ்க்கும் மனதளவில் பாசத்துடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இவரது செயல்பாடுகள் "காவல்துறை உங்கள் நண்பன்" என்ற சொல்லுக்கு உயிர் கொடுத்து வருவதாகவே  பார்க்கப்படுகிறது.

மேலும், இந்நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அந்தோணி மைக்கேல், ஆசிரியர்கள் மாதவி, மகேஷ்வரி, உலகம்மாள், முத்துக்குமாரி, பெகா, சங்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளையவேந்தன் இளைஞர் அறக்கட்டளை சார்பாக யோவான் கலந்து கொண்டார்.