தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444 வது ஆண்டுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 7 மணியளவில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலி முடிந்ததும் அருள்தந்தைகள் ஊர்வலமாக கொண்டுவந்த தூய பனிமயமாதா உருவம் பொறித்த கொடி பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். மேலும், புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26 இல் தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும்.
திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவர்-மாணவிகள் கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், நற்கருணை பவனி நடைபெறும். 10 ஆம் நாள் விழாவில் நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ தேர் பவனி நடைபெறும்.
வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர் பவனி நடைபெற உள்ளதால் அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
